Sunday 27 July 2014

நின்னோடு என் நினைவுகள்

நீ என்னோடு இல்லையென்ற நிஜத்தை 
நீ என்னோடு இருப்பதான நினைவுகள் 
தோற்கடிக்கின்றன ; நீ என்னோடு 
இல்லையென கேலி செய்கையில் பிம்பமற்ற 
நிழலாய் வந்து வேலியென நிற்கிறாய் நீ 

கடற்கரை மணலில் என் கால்தடங்களின் 
அருகில் உன் கைபிடித்து வரும் இடைவெளிதாண்டி 
இல்லாத உன் பாதச்சுவடுகள் இருப்பதாகவே 
எண்ணி மகிழ்கிறேன் எப்பொழுதும் நான் 

என்னை சுற்றி ஒலிக்கும் எத்துணையோ 
சப்தங்களுக்கு மத்தியில் உன் குரல்நான்கள் 
எழுப்பிய ஒலிகள் மட்டும் என்னுள் சங்கீதமாய் 
வீணை மீட்டிகொன்டே இருக்கிறது 

வருடங்கள் ஓடினாலும் வயதே கூடினாலும் 
சித்திரை வெயிலிலும் நித்திரை கொள்கிறேன் 
உன் மார்பின் கதகதப்பில் என் தலை வைத்து 
உறங்கிய அந்த சிறு நாட்களோடே ஒவ்வொரு 
இரவும் உறக்கம் கொள்கிறேன் நான் 

எவ்வளவு சோகங்கள் என்னை சூழ்ந்தாலும் 
உன்னோடு வாழ்ந்த நாட்கள் மனதில் ஓட 
மகிழ்ச்சி கொட்டும் ;எத்துனை வேகமாக வந்தாலும் 
என்னை தாண்டி செல்ல மறுக்கிறது உன் நினைவுகள் 

எல்லாவித அழகு ஆடைகளை வாங்கியும் 
அழகு குறைந்தே தோன்றுகிறது பெட்டியில் 
பொக்கிசமாய் உறங்கும் நீ வாங்கித்தந்த 
பாவாடை சட்டையின் அழகின் முன் 

அந்நாட்களில் களைத்து இறங்கி வந்து 
இழைத்த உடம்போடு உணவு உண்கையில் 
உழைத்த உன்மீது வரும் வியர்வை நறுமணத்தை 
வாசித்துகொண்டே இந்நாட்களில் தினமும் 
உண்கிறேன் என் மதிய உணவை 

ஊராரும் உடனிருப்போரும் நீ இல்லையெனலாம் 
என்னுள்ளிருக்கும் உன்னை என்னையன்றி 
உன்னால் கூட உணரமுடியாது "அப்பா " -இவள் 
உன் உணர்வுகளை சுவாசித்து வாழ்வைநேசிப்பவள் 

நான் பட்டாம்பூச்சியாய் பறந்து திரிந்தாலும் 
என்றும் நின்னோடு என் நினைவுகள். 


...கவியாழினிசரண்யா...

Sunday 20 July 2014

நட்பெனும் நண்பனுக்கு


என்கதை பல உன்னிடம்  சொல்லிட வார்த்தை தேடுகையில் 
அத்துனை வார்த்தைகளும் இல்லாது மறைந்து 
உன் அன்பெனும் மனம், புரிந்துகொள்ளும்படி -நான்  
மௌனத்தை மட்டும் உதிர்க்கிறேன் எப்போதும் 

முகத்தில் போலிஇல்லா புன் சிரிப்போடு ,
மனதில் கள்ளமில்லா உண்மை அன்போடு ,
எண்ணத்தில் களங்கமில்லா நல் நட்போடு - தொடரும்
உன் நட்பில் நடைபோடுகிறேன் நாட்களோடு

மாயகண்ணனின் புல்லாங்குழல்  இசை 
மனதில் காதல் சொட்டவைக்கும்  ராதைக்கு
மனம் நிறைந்த நண்பன் உன் வார்த்தைகள் -தன்னபிக்கை 
மரம் வளர்க்கும் நட்போடு  இந்த தோழிக்கு 

மகிழ்ச்சியோடு மனம் நினைப்பதெல்லாம்   
காட்சியாக  தருமாம் கதைகளில் சொர்க்கம் 
என் மனம் காண்கிறது மகிழ்ச்சி நிறைந்து - என்றும்
உன் நட்பால் நிஜ வாழ்வில் சொர்க்கம்.

                           ...கவியாழினி சரண்யா ...