Sunday 23 February 2014

அகவை நூறு


பதினெட்டு மாதத்தில் வடிக்கப்பட்ட சிலையே 
தமிழின் பெருமைக்கு வைக்கமுடியாத விலையே 

பதினெட்டாயிரம் டன் சல்லிகளும் எஃகுஇரும்பும் 
ஐயாயிரம் டன் சாந்தும் கலந்த கலவையே 

வருடங்கள் பல கடந்தும் ஒருமுறையே தன்னை 
புதுப்பித்து மெருகேற்றிய குமரிப்பெண்ணே 

கடல் கொந்தளிப்பு அதிகம் நிகழும் 
பகுதியிலிருந்தும் சமாளித்து பிரச்சனை 
காட்டிகொள்ளாத குடும்ப பெண்ணே 

காலங்கள் கடந்தும் வருவோர்க்கு கம்பீரமாய் 
காட்சி தரும் எழிலோவிய மழலையே 

தனுஷ்கோடி புயலிலும் சிறிதும் ஆட்டம் 
காட்டாமல் வலிமை மிகுந்திருந்த ஆண்மையே 

இரண்டு கிலோ மீட்டரில் கால் நீட்டி உறங்கும் 
வயோதிக கொள்ளு பாட்டியே (தாத்தாவே) 

வருவோரை மடியில் சுமந்து வழிகாட்டி 
உரிய இடம் சேர்க்கும் தாய்மையே 

இந்தியநிலப்பரப்பையும் இராமேசுவரத்தையும் 
இணைக்கும் ஒரே இணைப்பு பாலமென 
சிறந்து விளங்கும் குருவே 

இன்றோடு உனக்கு அகவை நூறு - என்றும் 
சிறக்கும் உன்னால் தமிழனின் பேரு 

...கவியாழினி...

Saturday 22 February 2014

வசந்தம்



வாசித்த உடன் வசந்தம் வருமென்று
யாரோ வடித்த வர்ணனை வதந்தியை
மனதில் வாங்கிக்கொண்டு மலரை
வாசிக்க பறக்கிறது இந்த வண்ணாத்துப்பூச்சி ...
...கவியாழினி...



Monday 10 February 2014

இந்தக்குமரியும் அந்தக்குமரியும்



சிறு வயது ஆசை 
சில்வண்டாய் எப்போதும் 
என்னைச் சுற்றிவரும் 
சில்லென்ற தென்றலாய் 
சிறகுகள் வருடிட 

கண்கள் திறந்தேன் 
ஆசை நிஜமானது 
கன்னியாகுமரியில் நான் 
களிப்போடு நின்றிருந்தேன் 

ஐந்தாம் வகுப்பில் 'உலகம் போற்றும் 
உன்னத குமரி நானும் சென்றேனே' 
தமிழில் படிக்கையிலே 
மனதுள் பதியம் போட்டது 
இன்று மலர்ந்து மணம் பரப்பியது 

கடலின் வாசத்தில் பிறந்து 
கடலோடு வளர்ந்தாலும் 
கடல் என்றும் களிப்பாகவே; 
குமரியிலும் இந்த குமரி 
கடலோடு களிப்புகொண்டேன் 

வங்காள விரிகுடாவில் 
வண்ணமயமாக வளர்ந்தவள் 
இன்று அதன் ஒருகரையை 
முதன் முதலாய் கண்டேன் 

முக்கூடலில் இவளும் 
சங்கமித்தால் நான்காக 
இவளின் மனதின் மகிழ்ச்சி 
அலைகள் ஓயாது 
அடித்துகொண்டே இருந்தது 

என்னை சிறு வயதில் 
சிந்திக்க வைத்தவர் 
மனதுள்ளே வீரத்தை 
ஊட்டியவர் மண்டபத்தில் 
கம்பீரமாய் காட்சி தந்தார் 

என் மனதுள் நிறைந்த அமைதி 
ஆனந்தத்தை எப்படி சொல்ல 
வார்த்தைகள் கிட்டுமோ 

என் மனதுள் இன்னமும் 
பிரமாண்டமாய் நின்றிருப்பவர் 
இங்கும் நின்றுகொண்டிருந்தார் 
அப்படியே திருவள்ளுவர் 

அவரின்பாத நகக் குழம்புக்குள் 
என் கை விரல்கள் எதையோ 
மீட்டிக்கொண்டிருந்தன 
எனக்கும் தெரியாமல் 

இருவரின் ஆசியோடு 
விடை பெற மனமின்றி 
மீண்டும் வருவேனென்ற 
வாக்குறுதி கொடுத்து விடைபெற்றேன் . 

இந்த குமரியால் மறக்கவே முடியாத 
அந்த குமரி மறப்பேனோ என் வாழ்நாள் 
முடிந்தும் இந்நாளை 11.12.13 
11 ம் நாள் ,12ம் மாதம் ,13 ம் வருடம் 

...கவியாழினிசரண்யா ...