Thursday 7 November 2013

கற்சிலையும் கண்ணீர் வடிக்கும்



பட்ட படிப்பு படித்து பணிசெய்து 
வீடுகட்டி பாவையிவள் 
கவலையின்றி வாழுகிறாளென 
பேசிடும் ஊரார்க்கு தெரியுமோ 
படாதபாடு பட்டு படிப்படியாய் 
படிப்போடு பணிசெய்து பண்போடு 
அவள் வாழும் வாழ்வு 


உறவாளன் வந்திருந்தும் சிரித்து 
பேச கூட பிடிக்கலையோ சிறுக்கிக்கு 
தனியாகவே வாழ்வை சமாளிக்கும் 
அசட்டு தைரியோமோவென பேசும் 
உறவினருக்கு தெரியுமோ 

காசில்லாத காலத்திலே தூசியென 
தூரம் தூக்கிப்போட்ட உறவுகளின்று 
செல்வம் இருக்கையிலே தேடிவர 
போலி புன்னகையாவது 
செய்யென்று மனம் சொல்லியும் 
மறுத்து நிற்கும் உதடுகளை 


எப்போதும் சிரித்து மகிழ்ந்து 
சுற்றிவருகிறாள் கவலைகள் 
தெரியாதவளாய் கொடுத்துவைத்த 
வாழ்க்கை வாழ்பவளென பேசிடும் 
சக பணியாளர்களுக்கு தெரியுமோ 


மனதுக்குள் துயரங்கள் கடலாய் 
கொண்டு எழும்பும் அலைகளின் 
ஓசையை வெளியில் காட்டாது 
பிறரை சிரிக்க வைத்து மனதில் 
அழுதுகொண்டிருக்கும் அவளின் நிலை 


எப்போதும் எதையாவது செய்துகொண்டு 
உன் போக்கிலே இருக்கிறாயா 
வீட்டின் கஷ்டம் துளியேனும் 
நினைவிருக்காவென அதட்டும் 
அம்மாவிற்கு தெரியுமோ 


தன் கவலைகளை மனதில் 
புதைத்து துயரங்களை வீட்டிற்குள் 
வராது தூரம் வைத்து நித்தம் 
தன்னுள்ளே அழுதும் சிரித்தும் 
சிந்தித்தும் செயல்பட்டு 
குடும்பத்தை செம்மைபடுத்தும் 
அவளின் உள்ளத்தை 



வெளி உலகில் மகிழ்வோடும் 
புன்னகையோடும் பூத்துக்குலுங்கும் 
இவளின் மனம் படும்பாடும் 
எழும் துயரங்களையும் 
அனுபவிக்கும் வலிகளையும் 
பெற்ற அனுபவங்களையும் 
செவி கொடுத்து கேட்டால் 
கற்சிலையும் கண்ணீர் வடிக்கும்.

...கவியாழினி ...


No comments:

Post a Comment