Saturday 23 August 2014

கடிதங்கள்


கட்டுக்கடங்கா பாசத்தையும் 
கணிக்க இயலா நேசத்தையும் 
சொல்லி முடிக்க முடியாமல் 
சொல்லாமலே அறியவைக்கும் 

எண்ணிலடங்கா எண்ணங்களின் 
வெளிப்பாடாய் எத்தனையோ 
உறவுகளின் குவியலாய் 
தொன்று தொட்டு தொடர்ந்து வந்த 

தொய்வில்லா நன்றிமறவா பண்பாடது 
ஓர் ஊரனைத்தும் விசாரித்து முடியாமல் 
ஓர் ஓரத்திலும் நுணுக்கி எழுதிவிசாரிக்கும் 
வரும் நாளை எதிர்ப்பார்த்து 

வந்து வந்து எட்டிப்பார்க்கும் சுகம் 
வந்துசேர்வதை எண்ணி 
வயது பெண் முதல் 
வயதான மூதாட்டி வரை 
காத்திருந்து கையில் பெரும் சுகம் 

முன் தெரு மல்லிகா அக்கா முதல் 
முள்ளுக்காட்டு முனுசாமி அண்ணன் 
வரை நலம் விசாரித்து 

பண்பாய் வீட்டு பசு கன்றையும் 
பக்கத்து வீட்டு கந்தசாமி 
தாத்தாவின் கைத்தடி வரை 

தன் கண்மூடாமல் கணக்கிட்டு விசாரித்து 
தன் கையில் வைத்திருக்கும் 
பேனாவின் மை தீரும் வரை 

தீட்டி முடித்து பின்பும் அதை 
விட்டுட்டனே என்று புலம்பி தீட்டும் 
ஓரத்தில் நுணுக்கி விசாரிக்கும் அன்பு 

காவல் தெய்வமாய் கண்ணுக்கு தெரியும் 
காவி உடை அணிந்த தபால்காரர் 

என் பையன் எழுதிருக்கான் படித்து சொல்லடி 
என் தங்கம் என்று பேத்தியை கொஞ்சும் பாட்டி 
கணவனின் விசாரிப்பை படித்து கண்ணீரில் 
கண் நேரில் பார்த்த மகிழ்சியில் 
காகிதத்தை கட்டியணைக்கும் மனைவி 

இது அனைத்திலும் நிரம்பி வழியும் 
ஒன்றேஒன்று இந்த கள்ளமில்லா 
உள்ளங்களின் கணிக்க முடியா அன்பு 

அந்த காலத்தில் எழுதிய 
கடிதங்களை பிரதி எடுத்தால் 
அவை இக்கால நீண்ட முழு தாளின் 
நான்கு பக்கம் நிறையும் 

அத்துணையும் அழகான அன்பின் ஏக்கங்கள் 
ஆசையாய் எடுத்து படித்தேன் அந்தக்காலத்தில் 
ஆறுதலாய் வந்து போன கடிதாசி 
என்ற கடிதங்களை ஏக்கத்தோடு ... 

...கவியாழினிசரண்யா..


1 comment: