Sunday 10 November 2013

ஏல பேராண்டி சௌக்கியமா சீமாட்டி



ஏல பேராண்டி சௌக்கியமா சீமாட்டி 
உன்ன பாக்கவேண்டி பொலம்புரண்டா உன்பாட்டி 

பாசமான உன் பேரசொல்லி மகிழ்ந்து 
பசுமாட்டில் பால்க் கரந்தன் 

தூங்கி மகிழும் உன் மெய்யழக 
தும்பிக்கிட்ட சொல்லி ரசிச்சன் 

சோம்பல் முறிக்கும் உன் அழக 
சோலை வண்டுகிட்ட பேசி மகிழ்ந்தன் 

பாலகன் உன்ன பார்க்க தவிக்கும் தவிப்பை 
பச்சைகிளியிடம் சொல்லி வச்சன் 

தெள்ளமுது உன் குரல் கேட்ட மகிழ்ச்சிய 
தென்றலையும் கூட்டிவந்து சொல்லி வச்சன் 

பாடம் படிக்கும் உன் அழக பார்த்து ரசிச்சத 
பட்டாம்பூச்சிகிட்ட பகிர்ந்துகிட்டன் 

விளையாடும் உன் அழக அப்படியே 
வெள்ளாட்டு காதுல விவரிச்சன் 

குளிக்க குறும்பு செய்யும் உன் குணத்த 
குயிலுகிட்ட சொல்லி ரசிச்சன் 

சுத்தி சுத்தி ஓடிவரும் உன் சுறுசுறுப்ப 
செவ்வெறும்புகிட்ட சொல்லி மகிழ்ந்தன் 

கண்ணடிக்கும் உன் அழக கண்டுகளிச்சத 
கம்மாகர மீனுகிட்ட கடலளவு சொல்லிவந்தன் 

கோவத்தில் கோச்சிக்குற உன் அழக 
கோழிகுஞ்சுகிட்ட கொஞ்சி மகிழ்ந்தன் 

உன் ஞாபகங்கள் உள்ளிருந்து ஆட்சிசெய்ய 
நிசமா உன்ன பாக்கனுன்னு கோடை 

விடுமுறைய சீக்கிரமா விட சொல்லி நம்ம 
கோணங்கிஅய்யாசாமிக்கு வேண்டிக்கிட்டன் 

சீக்கிரமா வந்துவிடு என் ராசா 
உன்ன பாத்து மகிழவே வச்சிருக்கன் என் உசுர பெருசா 
வரும் பாத பாத்து காத்துருக்கன் உன் ஆத்தா .. 

... கவியாழினி...

No comments:

Post a Comment